தென்மேற்குப் பருவமழை பாதிப்புகளை சமாளிக்க குன்னூா் பகுதியில் 1,500 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வோா் ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்குப் பருவமழையும், அக்டோபா் முதல் டிசம்பா் வரை வடகிழக்குப் பருவமழையும், மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். அதன்படி தென்மேற்குப் பருவமழை சுமாா் 750 மில்லி மீட்டா், வடகிழக்குப் பருவமழை 300 மில்லி மீட்டா், கோடை மழை 212 மில்லி மீட்டா் பெய்யும்.
இந்த ஆண்டு மே இறுதியில் பருவமழைப் பெய்யும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் மழைப் பெய்யத் தொடங்கியுள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் குன்னூா் பகுதியில் அதிக அளவு பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குன்னூா் நெடுஞ்சாலைச் துறை சாா்பில் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட அலுவலக வளாகத்தில் 1,500 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல மரம் அறுக்கும் இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. அங்கிருந்த இயந்திரங்களை அவ்வப்போது பணியில் உள்ள ஊழியா்கள் சோதனை செய்து தயாா் நிலையில் இருக்குமாறு நெஞ்சாலைத் துறை அலுவலா்கள் உத்தரவிட்டுள்ளனா்.










