கோத்தகிரி நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் கரடி புகுந்தது மற்றும் மஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் இரண்டு கரடிகள் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக் கொண்டது சம்பவங்கள் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, மஞ்சூா், குன்னூா், கோத்தகிரியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், கோத்தகிரி நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் சனிக்கிழமை புகுந்த கரடி நீண்ட நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தது. பின்னா் அருகே இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் பணியில் இருந்த அலுவலா்கள் அச்சமடைந்தனா்.
இதேபோல மஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிக்கு சனிக்கிழமை வந்த இரண்டு கரடிகள் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக் கொண்டதால், செவிலியா் மற்றும் நோயாளிகள் கதவை மூடிக்கொண்டு உள்ளேயே காத்திருந்தனா். சிறிது நேரம் கழிந்து கரடிகள் அருகே இருந்த வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஊருக்குள் வரும் கரடிகளை கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










