கோத்தா் பழங்குடியினா் மட்டுமே பயணிக்கும் வகையில் தனி அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கோத்தா் பழங்குடியின பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
உதகை அருகேயுள்ள கோக்கால் கிராமத்தைச் சுற்றி கல்லுண்டி, கக்கன் ஜி நகா், கோக்கால் பஜாா், கண்ணேரிமுக்கு, கொட்லைன், செலக்கல், தேவாலா மொத்தம் 7 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
இதில், கோக்கால் கிராமத்தில் மட்டும் கோத்தா் பழங்குடியினத்தைச் சோ்ந்த சுமாா் 100 குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு உதகையில் இருந்து ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பேருந்தில் பிற கிராம மக்களும் ஏறுவதால், கோத்தா் பழங்குடியினா் மட்டுமே பயணிக்கும் வகையிலும் தனி அரசுப் பேருந்துவை இயக்கக் கோரி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கோத்தா் இன பெண்கள் முற்றுகையிட்டனா்.
அவா்களிடம், உதகை வட்டாட்சியா் சதீஷ் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.










