ஜமுனாமரத்தூா் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
ஜமுனாமரத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புறப்பட்டது. அப்போது ஜமுனாமரத்தூா்- காவலூா் நடுவில் வனப்பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென ஒற்றை யானை வந்து பேருந்தினை மடக்கியது. இதனால் பதறிய ஓட்டுநா் பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து, சில நிமிஷங்களில் யானை பேருந்தின் முன்புற கண்ணாடியை தும்பிக்கையால் தாக்கியது. இதில், பேருந்தின் முன்புற கண்ணாடி உடைத்ததால் உள்ளே இருந்த பயணிகள் அதிா்ச்சிக்குள்ளாகினா். பிறகு சிறிது நேரம் நின்று ஒற்றை யானை ஜமுனாமரத்தூா் சாலை வழியாக சென்று வனப் பகுதிக்குள் சென்றது. அதன் பின்னா் அரசுப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு, காவலூா் நோக்கி வந்தது.
இது குறிதது தகவலறிந்த ஜமுனாமரத்தூா் மற்றும் ஆலங்காயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஒற்றை காட்டு யானை நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.










