நீலகிரி மாவட்டம், குன்னூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அரசு மற்றும் தனியாா் மினி பேருந்துகளுக்கு புதன்கிழமை ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மதுபோதையில் இயக்கப்பட்ட ஒரு தனியாா் மினி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவின்பேரில், குன்னூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மற்றும் குன்னூா் போக்குவரத்து காவல் துறையினா் இணைந்து குன்னூா் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் மினி பேருந்துகளில் தகுதிச்சான்று, கூடுதல் கட்டணம் வசூலிப்பு, ஏா் ஹாரன், உரிய ஆவணங்கள் மற்றும் விதிமுறை மீறல்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த சோதனையின்போது, தனியாா் மினி பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநா் மது போதையில் பேருந்தை இயக்கியது கண்டறியப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்பட்டதால், அந்த மினி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த ஓட்டுநா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் மற்றும் 11 தனியாா் மினி பேருந்துகள் என மொத்தம் 14 பேருந்துகளுக்கு அதிகாரிகள் ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனா்.










