திருப்பூரில் பெண் துப்புரவுத் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய தள்ளுவண்டிக் கடைக்காரரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர் மாநகராட்சியில் மூன்றாவது மண்டலத்துக்கு உள்பட்ட வார்டுகளில் துப்புரவுப் பணிகளை, தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் துப்புரவுத் தொழிலாளியாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அதன்பாய் (50) என்ற பெண் வேலை செய்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதன்பாய் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு தள்ளுவண்டியில் மக்காச்சோளம் விற்பனை செய்த தஞ்சாவூர் மாவட்டம், கள்ளபெரம்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (36) என்பவர் குப்பைகளை பொது இடத்தில் கொட்டினாராம்.
இது தொடர்பாக அவருக்கும், அதன்பாய்க்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த கார்த்திகேயன் தான் வைத்திருந்த எடை போடும் சிறிய தராசை எடுத்து அதன்பாயின் தலையில் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் அதன்பாய்க்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.