'வாழ்க்கைத் தரத்தை வாசிப்பு உயர்த்தும் என்று பொது நூலக இயக்குநர் ச.கண்ணப்பன் பேசினார்.
தமிழக அரசு பொது நூலகத் துறை, மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட மைய நூலகம் சார்பில், தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூர், பூங்கா சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பொது நூலக இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் முன்னிலை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவில் பொது நூலக இயக்குநர் ச.கண்ணப்பன் பேசுகையில், நடப்பு ஆண்டில் போட்டித் தேர்வுகளுக்காக ரூ.2.5 கோடிக்குப் புத்தகங்கள் வாங்கி, மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு தொலைக்காட்சியாக கணக்கில் எடுத்து கொண்டு வாசிக்க வேண்டும். வாசிப்புப் பழக்கம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்றார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில், திருப்பூர் தனி மாவட்டமாகி பல ஆண்டுகளாகியும் இன்னும் மாவட்ட நூலகத்துக்கு தனிக் கட்டடம் மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை. நூலகங்களுக்கு நூல்கள் சரியாக வாங்காததால் அதை நம்பி இருக்கும் பதிப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். அரசும், நூலகத் துறையும் இகைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
திருப்பூர் சமரச சன்மார்க்க சங்க செயலாளர் நீரணிபவளக்குன்றன், மாவட்ட நூலக அலுவலர் நா.மணிகண்டன், மாவட்ட மைய நூலகர் அ,தர்மராஜ் உள்ளிட்டோர் பேசினர். இதில், ஓலைச் சுவடிகள், அரிய வகை நூல்கள் உள்ளிட்டவை நன்கொடையாக வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.