அவிநாசி அருகே தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி அருகே உள்ள தெக்கலூரில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதை அடுத்து, இவ்வழியாக வந்து செல்லும் தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், புறவழிச்சாலை மேம்பாலத்தின் மீது சென்று வந்தன.
இதையடுத்து பலமுறை அப்பகுதி மக்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். எனவே மோட்டார் வாகன அலுவலர்கள் உத்தரவுப்படி, பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று சென்றன.
புதன்கிழமை இரவு திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ஓர் அரசுப் பேருந்தில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சீனிவாச திரையரங்கு பேருந்து நிறுத்ததில் ஏறியுள்ளார். ஆனால் அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் இருவரும், தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என்று கூறி அப்பெண்மணியை கீழே இறக்கி விட்டனர்.
இதனால் கோபமடைந்த அப்பெண், தங்கள் பகுதி மக்களுக்கு, தொலைபேசியில் இதுகுறித்து தகவல் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தெக்கலூர் பகுதி மக்கள் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த காவல்துறையினர், அரசுப் பேருந்து நடத்துநரிடமும், ஓட்டுநரிடமும் பேச்சு நடத்தினர். இறுதியில், வரும் காலங்களில் தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்திச் செல்வோம் என்று நடத்துநரும், ஓட்டுநரும் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.