பெருமாநல்லூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 1189 கோடி வாடகை நிலுவையைச் செலுத்தாமல் இருந்த 33 கடைகளுக்கு "சீல்' வைத்ததுடன், 88 வீடுகளுக்கு மின்னிணைப்பைத் துண்டித்து அறநிலையத் துறையினர் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாக, பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலுக்குச் சொந்தமாக கோவை -சேலம் சாலையில் உள்ள நிலத்தில் ஏராளமான கடைகள், வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை கோயில் பூசாரிகள் உள்ளிட்ட பலர் உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 7 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறைக்கு கடை, வீட்டின் உரிமையாளர்கள் ரூ. 1 89 கோடி தொகையை வாடகையாகச் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் கடன் தொகையைச் செலுத்தாததால், அவர்களது பெயர்கள் கடனாளிகள் பட்டியலாக கோயில் முன்பு வைக்கப்பட்டது. இருப்பினும் கடன் தொகையைச் செலுத்தாததால், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் வி. ஹர்ஷினி, பெருமாநல்லூர் போலீஸார், வருவாய்த் துறையினர் இணைந்து கடும் நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, 33 கடைகளுக்கு "சீல்' வைத்ததுடன், 88 வீடுகளின் மின்னிணைப்பைத் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர். கோயில் இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு மட்டும் குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதனால் பெருமாநல்லூர் பகுதியில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை பெரும் பரபரப்பு காணப்பட்டது.