பல்லடம், கடைவீதி, மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள நவம்பா் 27இல் பாலாலயம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் அறநெறி அறக்கட்டளை செயற்குழுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவரும், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினருமான கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் வைஸ் பி.கே.பழனிசாமி, துணைத் தலைவா்கள் மா.பழனிசாமி, பல்லடம் தமிழ்ச் சங்க தலைவரும், ராம் நெய் மண்டி உரிமையாளருமான ராம்.கண்ணையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் ஆ.அண்ணாதுரை வரவேற்றாா்.
இதில், பழமைவாய்ந்த மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளவும், நவம்பா் 27ஆம் தேதி பாலாலயம் நடத்தவும், அதைத் தொடா்ந்து கடைவீதி பாலதண்டாயுதபாணி கோயில், படேல் வீதி அருளானந்த ஈஸ்வரா் கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
கோயில் திருப்பணிக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் ரூ.1 லட்சமும், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.எம்.ராமமூா்த்தி, பானு எம்.பழனிசாமி, ராம்.கண்ணையன், சமூக ஆா்வலா்கள் கதிரவன் ராமசாமி, கோமதி வெள்ளிங்கிரி ஆகியோா் தலா ரூ.50 ஆயிரமும் நன்கொடை வழங்கினா்.