/

யானைகளை துன்புறுத்தும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக-கேரள எல்லையில் உள்ள சின்னாறு வனப் பகுதியில் யானைகளை துன்புறுத்தும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:47 pm

தமிழக-கேரள எல்லையில் உள்ள சின்னாறு வனப் பகுதியில் யானைகளை துன்புறுத்தும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்கள். அங்கு புலி, சிறுத்தைப் புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

சுமாா் 300க்கும் மேற்பட்ட யானைகள் அந்தப் பகுதியில் வாழ்ந்து வருவதாக வனத் துறையினா் எடுத்த கணக்கெ டுப்பில் தெரியவந்ததுள்ளது. இந்நிலையில், தற்போது வனப் பகுதிக்குள் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் யானைகள் தங்களது குடிநீா்த் தேவைகளுக்காக மாலை நேரத்தில் அமராவதி அணையை நோக்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது, உடுமலை-மூணாறு சாலையை யானைகள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் உள்ளூா் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வரும்போது யானைகள் மேல் குச்சிகள், கற்களை வீசி கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் யானைகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் இருந்து கீழே இறங்கி நின்று கொண்டு தற்படம் (செல்ஃபி) எடுப்பதுடன் அவைகளை தொந்தரவு செய்து வருகின்றனா். இதனால் கோபம் அடையும் யானைகள் சுற்றுலாப் பயணிகளை துரத்துகின்றன.

இதனால் உடுமலை மற்றும் அமராவதி வனத் துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனா். குறிப்பாக யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும் வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து உடுமலை, அமராவதி வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

யானைகள் மீது கற்களையும், குச்சிகளையும் வீசி கலாட்டாவில் ஈடுபடும் சுற்றுலப் பயணிகளை கட்டுப்படுத்த நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அன்றாடம் ரோந்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். அதையும் மீறி ஒரு சிலா் இங்கு வந்து யானைகளிடம் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்னா். கலாட்டாவில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளிடம் உடனடியாக அபராதம் வசூலிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.