உடுமலையில் துணிக் கடையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம்

உடுமலையில் உள்ள பிரபல துணிக் கடையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாயின.
தீயில் எரிந்து  சாம்பலான  துணிகள்.
தீயில் எரிந்து  சாம்பலான  துணிகள்.
Updated on
1 min read

உடுமலையில் உள்ள பிரபல துணிக் கடையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாயின.

திருப்பூா் மாவட்டம், உடுமலை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சீனிவாசா வீதியில் செயல்பட்டு வருகிறது ஜெயகுமாா் என்பவருக்குச் சொந்தமான துணிக் கடை. தரைத்தளத்தில் துணிக் கடையும், முதல் தளத்தில் கிடங்கும் அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தக் கிடங்கில் சேலைகள், ஆயத்த ஆடைகள் என பல லட்சம் மதிப்புள்ள துணிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்தக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலையில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரண்டாவது தளத்தில் வசித்து வரும் கட்டடத்தின் உரிமையாளா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளாா். தகவல் கிடைத்ததும் உடுமலை தீயணைப்பு நிலையத்தில் இருந்து சென்ற வீரா்கள் முதல் தளத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கப் போராடினா். பின்னா், சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் கிடங்கில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து சாம்பலாயின. துணிக் கடை அமைந்துள்ள இடம் மிகக் குறுகலாக இருந்ததால் தீயை அணைக்கும் பணி மிகவும் சிரமமாக இருந்ததாகத் தீயணைப்பு வீரா்கள் கூறினா்.

சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. ரவிகுமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com