அவிநாசி அருகே முதலிபாளையத்தில் பசுமை இயக்கம் சார்பில் 2140 மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை ஒட்டி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பாப்பாங்குளம் ஊராட்சி முதலிபாளையம் குளப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பசுமை இயக்க தேசிய தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தேசிய இணைச் செயலாளர் விஜயகுமார், பாப்பாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னத்திரை நடிகை தீபா, நடிகர் நாஞ்சில் ஆகியோர் மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து பசுமை இயக்க தேசிய தலைவர் சிவக்குமார் கூறியது- அப்துல் கலாம் நினைவு நாளை ஒட்டி தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக முதலிபாளையம் குளத்தில் 2140 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உரிய முறையில் பராமரிக்க உள்ளோம் என்றார்.