காங்கயத்தில் புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காங்கயம் நகரம், திருப்பூா் சாலையில் காங்கயம் போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த இருவா், வாகனத்தில் சந்தேகமளிக்கும் வகையில், அதிக அளவில் மூட்டைகளை ஏற்றிச் சென்றுள்ளனா்.
அந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவா்கள் ஏற்றிச் சென்ற மூட்டைகளுக்குள் குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட 266 பாக்கெட் புகையிலைப் பொருள்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற காங்கயம், திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (41), பாரதியாா் தெருவைச் சோ்ந்த இப்ராஹிம் (39) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் கடத்திச் சென்ற 51.5 கிலோ புகையிலைப் பொருள்கள், அவா்கள் ஓட்டி வந்த 2 இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.