திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பட்டா வழங்கக்கோரி கைத்தறி நெசவாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கைத்தறி நெசவாளர்கள் 118 பேருக்கு மடத்துக்குளம் அருகே உள்ள தாந்தோணி கிராமத்தில் தலா 3 சென்ட் வீதம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அதன்பிறகு அந்த இடத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் வேறு நபர்களுக்கு விட்டுவிட்டனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பட்டா வழங்க முடிவு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இந்த உத்தரவை மதிக்காமல் காங்கேயம் தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் காலதாமதம் செய்து வருகின்றனர். ஆகவே கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா வழங்கவும், காலதாமதம் செய்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.