திருப்பூர்: தாராபுரத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
தாராபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இதில், தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க: புதுவை மின்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து விசிக கண்டன பேரணி
இதன்படி தற்போது இந்தக் கல்லூரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உயர் கல்வியினை அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் மற்றும் சமநீதிக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டு வரும் நோக்கில் இலவச கல்வித் திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் மிகச் சிறந்த உயர்கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், அரசு கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கு.புஸ்பலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.