டேங் ஆப்ரேட்டர்களுக்கு ஒரே விகிதத்தில் மாநிலம் முழுவதும் சம்பளம் நிர்ணயம் செய்யக் கோரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் அவிநாசியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி டேங் ஆப்ரேட்டர்களுக்கு ஒரே விகிதத்தில் மாநிலம் முழுவதும் சம்பளம் நிர்ணயம் செய்து, நிலுவைத் தொகை வழங்க வேண்டும். மேலும் ஆப்ரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதியம் உயர்வுக்கு அரசாணை திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.
இதையும் படிக்க- என்னக் கொடுமை? ரூ.2,500க்கு விற்கப்பட்ட போலி ரத்தம்
தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து ரூ. 3,600-லிருந்து ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். முன் களப்பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கரோனா ஊக்கத்தொகை ரூ.15,000 ஊராட்சி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். அரசாணைபடி ஓய்வு பெறும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணிக் கொடையும், ஓய்வூதியமும் தாமதமின்றி வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெறும் டேங் ஆப்ரேட்டர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு பொறுப்பாளர் பி. பழனிச்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எம்.சந்திரன், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.முத்துசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் எஸ். வெங்கடாசலம், திருமுருகன்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் பி. சுப்பிரமணியம், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆர். பழனிச்சாமி ஆகியோர் பேசினர்.