அவிநாசி: திருமுருகன்பூண்டி அருகே விஜிவிஶ்ரீ கார்டன் பகுதியில் பேருந்து நிற்காதது, அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி உள்பட்ட பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு பிரதான பேருந்து நிறுத்தம் திருப்பூர்-அவிநாசி சாலையில் உள்ளது. இருப்பினும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கு நிற்பதில்லை.
மேலும் சீரான குடிநீர் வசதி இல்லை. குறிப்பாக குடியிருப்பு நுழைவு வாயிலில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியாகும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழகம், மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூர் அவிநாசி சாலையில் இரு புறமும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம், காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவிநாசி - திருப்பூர் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.