அவிநாசி மொண்டிபாளையம் பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் மேலத்திருப்பதி எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அதிகாலை 4 மணிக்கு கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள், வைகுண்டநாதப பெருமாளுக்கு திருமஞ்சனம் அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதல் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல அவிநாசி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, கருடவாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.