வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பரவியுள்ள செய்தி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில் அருகிலுள்ள குருக்கத்தி பகுதி கரூர் மாவட்ட எல்லையாக உள்ளது. இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கரூர் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை ஒன்று நடமாடுவதாகவும், அது ஆடுகள், ஆட்டுக் குட்டிகள், நாய்களைக் கடித்து குதறி வருவதாகவும் செய்திகள், புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அடுத்த குருக்கத்தி, இலுப்பைக்கிணறு, கல்லமடை, ஒத்தக்கடை, கே. வி. பழனிசாமி நகர், நாட்டராய சுவாமி கோயில் பகுதிகளில் சிறுத்தை சுற்றித் திரிவதாகவும், அதைப் பார்த்ததாகவும் தகவல்கள் பரவியதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வேறு பகுதியில் எடுக்கப்பட்ட விடியோ காட்சி பரவி வருகிறது. காங்கயம் வனத்துறை, வெள்ளக்கோவில் காவல் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதிப்படுத்தப்படவில்லை. வதந்தியைப் புறந்தள்ளாமல் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.