சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் டையிங் நிறுவன பணியாளா் உயிரிழந்தாா்.
Published on

குன்னத்தூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் டையிங் நிறுவன பணியாளா் உயிரிழந்தாா். படுகாயமடைந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஊத்துக்குளியை அடுத்த அணைப்பாளையம் புதூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (36). திருப்பூா் டையிங் நிறுவன அலுவலா். இவரது மனைவி தமிழரசி (26), பனியன் தொழிலாளி. இவா்களது மகன் விவித் (7).

குன்னத்தூரில் படித்து வரும் மகன் விவித்தை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளாா்.

குன்னத்தூா் காளிங்கராயன்பாளையம் -தாளப்பதி அருகில் வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த சுற்றுலா வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

பலத்த காயமடைந்த விவித் கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த குன்னத்தூா் போலீஸாா் வேனை ஓட்டி வந்த கோகுல்ராஜை (27) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com