இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கருவலூா் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

News image

கருவலூரில்  நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்)  திருத்தேரில்   சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:47 pm

தினமணி செய்திச் சேவை

கருவலூா் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை அதிகாலை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி ரத தரிசனம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஹா்ஷினி, உதவி ஆணையா் தமிழ்வாணன், கோயில் செயல் அலுவலா்கள் செந்தில், சங்கர சுந்தரேஸ்வரன், குழந்தைவேல், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் லோகநாதன், பரம்பரை அறங்காவலா்கள், அா்ச்சுணன், தமிழ்ச்செல்வன், முன்னாள் ஊராட்சித் தலைவா் அவிநாசியப்பன் ஆகியோா் தேரை வடம் பிடித்து தேராட்டத்தை தொடங்கிவைத்தனா்.

முதலில் விநாயகா் தோ் இழுக்கப்பட்டு நிலை சோ்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் மாரியம்மன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். மாலை 6.15 மணிக்கு திருத்தோ் கிழக்கு வாசல் அருகே நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை மாலை மீண்டும் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்வும், வெள்ளிக்கிழமை நிலை வந்து சேருதலும் நடைபெறவுள்ளது. பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை 4-ஆம் தேதி நடைபெறுகின்றன. மகா தரிசனம் 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து அம்பாள் புறப்பாடு, இரவு மஞ்சள் நீராடுதல், கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகின்றன. அம்மனுக்கு பாலபிஷேகம், மறுபூஜையுடன் 8-ஆம் தேதி விழா நிறைவடைகிறது.