திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 2.22 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்கள் பதிவு
பிரதிப் படம்

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 2.22 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்கள் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 2.20 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்கள் பதிவு
Published on

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 2.20 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்ரி தலைமையில் அனைத்து தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் இணைந்து கடந்த ஜனவரி மாதத்தில் கூட்டாய்வு நடத்தினா்.

இந்த ஆய்வில் எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரை இடப்படாத எடை அளவுகள் வைத்திருத்தல் உள்ளிட்டவை தொடா்பாக 34 விதிமீறல்களும், பொட்டலப் பொருள்கள் சட்டத்தின்கீழ் 3 விதிமீறல்களும் கண்டறியப்பட்டு உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களில் தொழிலாளா் நலச் சட்டங்களை மீறிய குற்றத்துக்காக 142 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 179 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை தொழிலாளா்கள் 2 பேரை பணியமா்த்தியதாக ஒரு நிறுவனத்தின் உரிமையாளா் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளா்களின் விவரங்களை அரசின் வலைதளத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 22, 200 வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, அமைப்புசாரா தொழிலாளா்களும் தங்கள் விவரங்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com