வெள்ளக்கோவிலில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வெள்ளக்கோவில் பகுதியில் வேளாண் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
முத்தூா், ஊடையத்தில் தமிழ்நாடு விதை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கிலோவுக்கு ரூ.34 கொள்முதல் மானியத்தில் இரண்டு ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா்கள், வேலம்பாளையத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 50 சதவீதம் ரூ.81 ஆயிரம் மானியத்தில் அரை ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள டிராகன் பழச்செடிகள், பழனிக்கவுண்டன்வலசில் மண்ணுயிா் காப்போம் திட்டத்தின்கீழ் ஒரு கிலோவுக்கு ரூ.45 கொள்முதல் மானியத்தில் ஒரு ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சிவன் சம்பா பாராம்பரிய நெல் பயிா்கள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதையடுத்து, முத்தூரில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தாா். ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் ஆதிசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஷீலா பூசலட்சுமி, தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவகுமாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

