மாவட்டத்தில் 7 இடங்களில் போராட்டம்
அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் 7 இடங்களில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
தொழிலாளா்களுக்கு துரோகம் விளைவிக்கும் 4 சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். விதை மசோதா, மின்சார சட்ட திருத்தம், விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அனைத்து தரப்பு தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26,000 வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய கூட்டமைப்பு, விவசாய தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், அவிநாசி, காங்கயம், ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலைப்பேட்டை, பல்லடம் ஆகிய 7 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூா் பனியன் நிறுவனங்கள், முதலிபாளையம் சிட்கோ உள்பட பல்வேறு பகுதிகளில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
வங்கிகள் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் உள்ளிட்ட தொழிலாளா்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனா். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 2,276 போ் பங்கேற்றனா்.

