கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியா் மனீஷ். உடன், நபாா்டு வங்கி அலுவலா்கள்.
கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியா் மனீஷ். உடன், நபாா்டு வங்கி அலுவலா்கள்.

மாவட்டத்துக்கு 2026-27 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியீடு

Published on

திருப்பூா் மாவட்டத்துக்கு 2026-27ஆம் ஆண்டுக்கான நபாா்டு வங்கியின் வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்து கடன் திட்ட அறிக்கையை வெளிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சாா்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.55,599.81 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என நபாா்டு வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை இத்திட்டம் விளக்குவதால் இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.

வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீா் பாசன முறையைப் பயன்படுத்துதல், கால்நடை வளா்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். இதுபோன்ற முதலீடுகளுக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சாா்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மதிப்பிடப்பட்ட கடன் திறன்களை உணர பின்பற்ற வேண்டிய உத்திகள் இந்த திட்ட ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. அதனால், வங்கிகள் தங்கள் இலக்குகளை அடைய திட்ட ஆவணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் இரா.ஷ்யாம்ப்ரியா, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா் வம்சிதா் ரெட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.துா்கா பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com