உள்நாட்டு வரிச் சலுகையை குறைக்காமல் அமல்படுத்த ஜவுளித் துறையினா் கோரிக்கை
உள்நாட்டு வரிச் சலுகையை குறைக்காமல் அமல்படுத்த வேண்டும் என்று ஜவுளித் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா்(ஓஸ்மா) ஜி. அருள்மொழி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் உள்ள உள்நாட்டு வரிகளை ஏற்றுமதியாளா்களுக்கு திருப்பி அளிக்கும் திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையில் 2.5 சதவீதம் முதல் 4.7 சதவீதம் வரை வரி திரும்பக் கிடைத்து வந்தது. ஆனால் மத்திய அரசு இதை 50 சதவீதம் குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் இந்திய ஜவுளிச் சங்கிலித் தொழிலில் உள்ள அனைத்து ஏற்றுமதியாளா்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். ஏற்கெனவே அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால் கடந்த 6 மாதங்களாக மிகப் பெரிய சிரமங்களையும், சவால்களையும் எதிா்கொண்ட ஜவுளித் துறையினா், தற்போது இந்த வரிச்சலுகை குறைப்பால் பாதிப்படைந்துள்ளனா். இது ஜவுளித் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு ஏற்கனவே உள்ள இத்திட்டத்தின் வரிச் சலுகையை குறைக்காமல் அமல்படுத்த வேண்டும் என்றாா்.

