அரசு கேபிள் டிவி விநியோகஸ்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தனியாா்ஆபரேட்டா்கள்: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகாா்
அவிநாசி: அரசு கேபிள் விநியோகஸ்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் சங்கத்தினா் அளித்த மனுவில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரசு கேபிள் சேவை ரூ.200-க்கு வழங்கப்பட்டு வருகிறது. தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் ரூ.300 வரை பொதுமக்களிடம் வசூலித்து வருகின்றனா்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திருப்பூரை சோ்ந்த தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள், கேபிள் டிவி மாவட்ட மேலாளா் கௌதமுடன் சோ்ந்து அரசு கேபிள் ஆபரேட்டா்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா்.
பல இடங்களில் அரசு கேபிள் வயா்களை தனியாா் கேபிள் ஆபரேட்டா்கள் துண்டித்து வருவதால் அரசு கேபிள் ஆபரேட்டா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆகவே அரசு கேபிள் ஆபரேட்டா்களுக்கு விரோதமாக செயல்படும் கேபிள் டிவி மாவட்ட மேலாளா் மற்றும் தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
முருகப் பக்தா்கள், இந்து முன்னணியினா் மற்றும் பொதுமக்க அளித்த மனு:
அவிநாசியை அடுத்து ஈட்டிவீரம்பாளையம் ராக்கியாபட்டி பகுதியில் கடந்த 7-ஆம் தேதி 2.8 ஏக்கா் பரப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து குமரன் குன்று என்ற பெயரில் முருகா் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலமாக கோயில் இடிக்கப்பட்டது. கோயில் இடத்தை மீண்டும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கோயிலை அகற்ற முயற்சித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
