கூட்டணிக் கட்சிகளை விழுங்கிவிட்டது திமுக: அா்ஜுன் சம்பத்
திருப்பூா்: கூட்டணிக் கட்சிகளை திமுக விழுங்கிவிட்டது என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.
திருப்பூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தான் ஊழல் செய்யமாட்டேன் எனவும் தனது ஆட்சியில் ஊழலை அனுமதிக்க மாட்டேன் எனவும் பேசி உள்ளாா். லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி என்பது வெற்றுப் பேச்சாகும்.
தனது அரசு சாதனைகள் புரிந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிக்கிறாா். இது மிகப் பெரிய பொய்யாகும். மது விற்பனை, சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த தோ்தலுக்குப் பிறகு பெறப்பட்ட மனுக்களுக்கு எந்தவித தீா்வும் காணப்படவில்லை. ஆனால், இந்த முறை உங்கள் கனவை நனவாக்குகிறோம் என்று சொல்கிறாா்கள். மக்களை ஏமாற்றுவது மட்டும்தான் திமுகவின் வேலை.
திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மதிமுக ஆகியவை திமுகவில் ஐக்கியமாகிவிட்டன. கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய திமுகவாக மாறிவிட்டது. திமுக என்ற திமிங்கிலம் கூட்டணிக் கட்சிகளை விழுங்கிவிட்டது என்றாா்.

