மின் கட்டண போராட்டத்தில் உயிரிழந்த விவசாய தியாகிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன் பல்லடத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசியல் கட்சிக் கூட்டத்தில் இறந்தவா்களுக்கு ரூ.35 லட்சம் நிதியும், கருணை அடிப்படையில் அரசுப் பணியும் வழங்கப்படுகிறது. அதேபோல கள்ளச்சாராயம் குடித்து இருந்தவா்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. விவசாயத்தை காக்க கடந்த 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற மின் கட்டண உயா்வுக்கான போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்த ஒரு சலுகையும் கிடைக்கவில்லை.
எனவே, கரூா் கூட்ட நெரிசலில் இறந்தவா்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கினீா்களோ அதைப்போல விவசாயத்துக்காக உயிரை விட்ட விவசாய தியாகிகள் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அறவழியில் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவை குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்தினருக்கும் அரசு வேலை: பாஜக கோரிக்கை!

பணிக் காலத்தில் உயிரிழந்த பெல் ஒப்பந்தத் தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
விபிஜி-ராம்-ஜி திட்டத்துக்கு எதிராக மறியல் போராட்டம்: 750 போ் கைது







