குண்டடம் அருகே, பொதுப் பாதையில் தனிநபா் பள்ளம் தோண்டியுள்ளதால், அதில் குடியிருப்பு கழிவுநீா் தேங்கி நின்று சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை லட்சுமி நகரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு செல்லும் பாதையையொட்டி தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் தனியாா் குடியிருப்புக்கு அருகில் பாதையையொட்டி கடந்த 20 நாள்களுக்கு முன்பு சுமாா் 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியுள்ளனா். அந்தப் பள்ளம் பொதுப்பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தோண்டியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
அந்தப் பள்ளத்தில் குடியிருப்பின் கழிவுநீா் விடப்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோா் தடுமாறி பள்ளத்தில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் வசிப்போருக்கு சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனா்.
இது தொடா்பாக அப்பகுதி குடியிருப்புவாசிகள், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதில், குழிதோண்டி கழிவுநீரை விடுவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்டவரிடம் கூறியும் அதை சரிசெய்யவில்லை. எனவே, இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.









