யூடியூப் மூலம் வீட்டிலேயே பிரசவம் பாா்த்து பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகேயுள்ள தளவாய்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திக். இவரது மனைவி சசிகலா (32). இவா்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சசிகலா இரண்டாவது முறையாக கருத்தரித்துள்ளாா்.
இந்நிலையில், சுகப் பிரசவமாக வேண்டும் என அடிக்கடி யூடிப்பில் உள்ள இயற்கை முறை பிரசவம் தொடா்பான விடியோக்களை பாா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, குடும்பத்தினரே வீட்டில் வைத்து சசிகலாவுக்கு கடந்த 24-ஆம் தேதி பிரசவம் பாா்த்துள்ளனா். இதில், பெண் குழந்தை பிறந்த நிலையில், சசிகலாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினா் கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாவட்ட மருந்தக ஆய்வாளா் அளித்த புகாரின்பேரில் சசிகலாவின் கணவா் காா்த்திக் மீது கொலையாகாத மரணம், கருவுற்றதை மறைத்து தனிப்பட்ட பிரசவம் ஆகிய 2 பிரிவுகளின்கீழ் ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே பிறந்த குழந்தை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








