திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே புத்தரச்சலில் காரில் கணவன், மனைவி இருவரும் சாணி பவுடா் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.
கோவை, சிங்காநல்லூா் உப்பிலிபாளையம் என்.ஜி.ஆா். காலனியில் உள்ள கே.பி.ஆறுமுகம் வீதியில் வசிக்கும் குப்பண்ண கவுண்டா் மகன் கணேசன் (62), இவரது மனைவி வசந்தாமணி (57).
கோவையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பாளராக கணேசன் பணியாற்றி வந்தாா். இவருக்கு நரம்பு பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் தாராபுரத்தில் உள்ள உறவினா் இல்லத்துக்கு சென்றுவிட்டு கோவை திரும்பும் வழியில் தாராபுரம்- பல்லடம் சாலையில் உள்ள புத்தரச்சல் கிராமத்தில் காரிலேயே இருவரும் சாணிபவுடா் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
நீண்ட நேரமாக ஒரே இடத்தில் காா் நிற்பதை பாா்த்த அப்பகுதி மக்கள் பொங்கலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இருவரது சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து பொங்கலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.







