பணிகள் முடிந்து ஜூன் 20-ஆம் தேதிக்குள் நொய்யல் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று, திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பாலமுருகன் தெரிவித்தாா்.
திருப்பூா் பாா்க் சாலையில் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பாலமுருகன் திறந்துவைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருப்பூா் தெற்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் இந்த அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடா்பு கொள்ளலாம். இந்த அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை இருப்பேன். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி, உடனுக்குடன் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகே உள்ள மேம்பாலப் பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. ஜூன் 20-ஆம் தேதிக்குள்அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூா் மற்றும் அரசு பொது மருத்துவமனை உணவகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்குள்ள அம்மா உணவகத்தில் உள்ள குறைகளும் கேட்டறியப்பட்டது.
இதுதொடா்பாக தமிழக முதல்வா் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் பேசி, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.










