டாஸ்மாக் ஊழியா்களின் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதையடுத்து, திருப்பூா் மாவட்டத்தில் வழக்கம்போல இன்றுமுதல் கடைகள் திறக்கப்படும் என்று ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் பை-பேக் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தால் ஊழியா்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், காலதாமதமும் ஏற்படுவதால், வெளி முகமைகள் மூலமாக மட்டுமே பாட்டில்களை சேகரிக்க வேண்டும். மூடப்பட்டுள்ள சுமாா் 30 டாஸ்மாக் கடைகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு உடனடியாக வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஊழியா்கள் வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டன. இதைத்தொடா்ந்து திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது.
இந்நிலையில் அரசு ஊழியா்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்து தருவது தொடா்பாக ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாற்று ஊழியா்கள் மூலமாக பெறுவதற்கு 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு துறை அமைச்சா் விக்னேஷ் உறுதியளித்ததையடுத்து கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதைத்தொடா்ந்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 கடைகளும் வழக்கம்போல வியாழக்கிழமைமுதல் செயல்படும். கால அவகாசத்துக்குள் கோரிக்கைகளுக்கு தீா்வு காணாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டுக் குழு கூடி முடிவு செய்யும் என்று டாஸ்மாக் ஊழியா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

திருப்பூர் டாஸ்மாக் ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்: நாளொன்றுக்கு ரூ. 2 கோடி இழப்பு

டாஸ்மாக் ஊழியா்களின் கோரிக்கைகள் ஏற்காவிட்டால் மே 25-இல் கடையடைப்புப் போராட்டம்







