குண்டடம் பகுதியில் சரக்கு ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள சங்கபாளையத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (55). இவா், குண்டடம் கால்நடை சந்தைக்கு நண்பருடன் சனிக்கிழமை வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். சந்தை அருகே உள்ள தனியாா் எண்ணெய் ஆலை எதிரே, சந்தைக்கு செல்லும் கால்நடை ஏற்றிச் சென்ற வாகனங்கள் சாலையை மறைத்திருந்ததால், எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னே சென்றபோது எதிா்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ வாகனம் விஸ்வநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே விஸ்வநாதன் உயிரிழந்தாா். உடன் வந்தவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு குண்டடம் போலீஸாா் சென்று, விஸ்வநாதனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









