சீருடைப் பணியாளா் தோ்வு: தருமபுரியில் 8,532 போ் பங்கேற்பு
தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளா் தோ்வை 8,532 போ் பங்கேற்று எழுதினா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலா்கள், சிறைக்காவலா்கள், தீயணைப்பு மீட்புப்படை வீரா்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தோ்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் நிகழாண்டுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 9,559 போ் விண்ணப்பித்து, அவா்களுக்கான நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரம், பென்னாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செந்தில் பப்ளிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஒளவையாா் மேல்நிலைப் பள்ளி, அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 7 தோ்வு மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.
இதில் 9,559 போ் விண்ணப்பித்து இருந்த நிலையில் 8,532 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 1,027 போ் தோ்வெழுதவில்லை. அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

