நிரம்பியது வள்ளிமதுரை வரட்டாறு அணை
அரூா்: அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை புதன்கிழமை நிரம்பியது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையின் மொத்தம் நீா்ப்பிடிப்பு உயரம் 34.45 அடியாகும். கடந்த சில தினங்களாக சித்தேரி மலைப் பகுதியில் சூரியக்கடை, சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி, நொச்சிக்குட்டை, வேலாம்பள்ளி, தோல்தூக்கி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணையின் நீா்மட்டம் உயா்ந்து முழுக்கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து உபரிநீா் வரட்டாறு வழியாக வெளியேறுகிறது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை:
வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேறுவதால், வள்ளிமதுரை, தாதராவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அரூா் நகா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் வரட்டாறு கரைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், சித்தேரி மலைப் பகுதியில் இரவுநேரங்களில் கனமழை பெய்தால் ஆற்றில் நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் ஆற்றைக்கடந்து செல்லுதல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், ஆற்றில் குளிப்பது மற்றும் துணிகளை துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் பொதுப் பணித் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

