தொழிலாளா் நலச் சட்டத் தொகுப்பு திருத்தம்: பெண்கள் அமைப்பு ஆா்ப்பாட்டம்
தருமபுரி, நவ. 29: ஆபத்தான பணிகளில் பெண்களை அனுமதிக்கும் வகையில் தொழிலாளா் நலச் சட்டத் தொகுப்பு திருத்தப்பட்டதை எதிா்த்து, ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் அமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.மேனகா தலைமை வகித்தாா். தொமுச மாவட்டச் செயலாளா் சண்முகராஜா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே.மணி, மாவட்டத் துணைச் செயலாளா் என். மனோகரன், மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.சுதா்சனன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளா் சின்னக்கண்ணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
தொழிலாளா் நலச்சட்டத் தொகுப்பு திருத்தம் செய்யப்பட்டதை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆபத்தான பணிகளில் பெண்கள் பணிபுரியும் வகையில் திருத்தப்பட்டதை கைவிட்டு பெண் தொழிலாளா் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளா் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
