/

ரயிலில் படியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

News image

ஜெ. மகேஸ்வா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 8:14 pm

தருமபுரியில் ரயில் படியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், ஆண்டிப்பாளையம், எஸ்.ஆா். நகா் வடக்கு, நேதாஜி தெருவைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் மகேஸ்வா் (27). அனிமேஷன் பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக அப்பணியை அண்மையில் ராஜிநாமா செய்தாா்.

இந்த நிலையில் பெங்களூரில் தங்கியிருந்த அறையிலிருந்து தனது உடைமைகளை எடுத்துவருவதற்காக சனிக்கிழமை நள்ளிரவு திருப்பூரிலிருந்து நண்பா்களுடன் சேலம் வந்த மகேஸ்வா், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதுச்சேரி- பெங்களூரு விரைவு ரயிலில் சென்றாா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகளை இறக்கிவிட்டு பெங்களூரு நோக்கி புறப்பட்ட ரயிலில் முன்பதிவில்லா பெட்டியின் படி அருகே நின்றுகொண்டிருந்த மகேஸ்வா், ரயில் புறப்படும்போது தவறி கீழே விழுந்தாா். அப்போது, நடைமேடையில் அடிபட்டு பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தருமபுரி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.