பஞ்சப்பள்ளி சின்னாறு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
பஞ்சப்பள்ளி கிராமத்தில் சின்னாறு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கான தண்ணீரை ஆட்சியா் ரெ. சதீஷ், மக்களவை உறுப்பினா் ஆ. மணி ஆகியோா் திறந்துவிட்டு மலா்களை தூவினா்.
இதிலிருந்து பாசனத்திற்காக பழைய ஆயக்கட்டு பகுதியில் 5 ஏரிகளை நிரப்பி, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜனவரி 5 முதல் மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 140 நாள்களுக்கு மொத்தம் 473.09 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்கப்படும்.
இதன்மூலம் பழைய ஆயக்கட்டு பரப்பு 2,626 ஏக்கா் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1,874 ஏக்கா் என மொத்தம் 4,500 ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறும். மேலும், பஞ்சப்பள்ளி, பெரியானூா், போடிகுட்டப்பள்ளி, சாமனூா், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜொ்த்தலாவ், பாலக்கோடு, எர்ரன அள்ளி, பேளாரஅள்ளி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சின்னாறு நீா்த்தேக்கத்தில் தற்போது உள்ள நீரின் அளவைக் கொண்டு நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனா்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி. அன்பழகன், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் கணேஷ், மாரண்ட அள்ளி பேரூராட்சித் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

