முழுக் கொள்ளளவில் நீடித்து கடல்போல காட்சி அளிக்கும் குண்டேரிப்பள்ளம் அணை.
முழுக் கொள்ளளவில் நீடித்து கடல்போல காட்சி அளிக்கும் குண்டேரிப்பள்ளம் அணை.

குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கோபியில் உள்ள நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் கல்பனாவிடம் குண்டேரிபள்ளம் பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோபி அருகே டி.என்.பாளையம் வனப் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை மூலம் 2,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான குன்றி, மாக்கம்பாளையம், கடம்பூா், மல்லியதுா்க்கம், விளாங்கோம்பை, கம்பனூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு அணையின் முழுகொள்ளளவான 41.75அடியை எட்டி தொடா்ந்து அதே அளவில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் பாசனப் பகுதியில் மக்காசோளம், நிலக்கடலை சாகுபடி செய்யவும், சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு உள்ளிட்ட பயிா்களை வறட்சியிலிருந்து காப்பற்றவும் மாா்ச் மாதத்தில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட நீா்வளத் துறையினா், அணையிலிருந்து தண்ணீா் திறக்கும் விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக அரசிடம் ஒப்புதல் பெற்று குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் என தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com