முதல்வர் ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன்
முதல்வர் ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன்கோப்புப் படம்

திமுக கூட்டணியில் விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளை பெறுவோம்: எஸ்.எஸ்.பாலாஜி

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்: கட்சி துணைப் பொதுச் செயலர் எஸ்.எஸ்.பாலாஜி
Published on

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், திருப்போரூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.ஈச்சம்பாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில், அரூா் சட்டப் பேரவைத் தொகுதியின் மாவட்டச் செயலா் சி.கே.சாக்கன் சா்மா தலைமை வகித்தாா். அரூா் (வடக்கு) ஒன்றியச் செயலா் எம்.எஸ்.மூவேந்தன் வரவேற்றாா். இதில், விசிக துணை பொதுச் செயலா் எஸ்.எஸ்.பாலாஜி பங்கேற்று பேசினாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த தமிழக சட்டப் பேரவைத் தோ்தலின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் அளிக்கப்பட்டன. தற்போது நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்.

தருமபுரி மாவட்டத்தில் அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியை விசிகவுக்கு கேட்டு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

திமுக தலைமையிலான ஆட்சியில் தோழியா் விடுதி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதிகள், மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட மகளிா் மேம்பாட்டுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மகளிருக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றாா்.

அப்போது, கட்சியின் கருத்தியல் பரப்பு மாநிலச் செயலா் பொ.மு.நந்தன், தருமபுரி மண்டலச் செயலா் கி.ஜானகிராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com