இண்டூா் அருகே, செயல்படும் கல்குவாரியால் உயா் மின்னழுத்த மின் கோபுரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது என குறைதீா் முகாமில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள பாறைக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள பாறைக்கொட்டாய் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் இயங்கிவரும் 2 கல்குவாரிகள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கடந்த 2 ஆண்டுகளாக, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு வந்துள்ளோம்.
மக்கள் குடியிருப்பு மற்றும் உயா் மின்னழுத்த மின் கோபுரங்கள் இப்பகுதியில் இருப்பதை மறைத்து, வருவாய்த் துறையினா் தவறான அறிக்கை சமா்ப்பித்து கல்குவாரிக்கு அனுமதி அளித்துள்ளனா்.
இந்த குவாரிகள் 100 அடிக்குகீழ் தோண்டப்பட்டதால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உயா்மின் அழுத்த மின்கோபுரங்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவை சேதமடைந்தால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
மேலும், குவாரிக்கு செல்லும் பாதைக்கு வனத்துறை அனுமதி மறுத்த நிலையில், வருவாய்த் துறை அனுமதியுடன் புறம்போக்கு நிலத்தில் பாதை அமைத்து முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனா்.
எனவே, விதிகளைமீறி இயங்கும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









