‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

தருமபுரியில் சீட்டு மோசடி தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு

குடும்பத்தினா் மற்றும் பணியாளா்கள் 6 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:10 am IST

தருமபுரி மாவட்டத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக, தனியாா் நிதிநிறுவன உரிமையாளா், குடும்பத்தினா் மற்றும் பணியாளா்கள் 6 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள தாம்சன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ந.வெங்கடேசன் (66). இவரும், இவரது மனைவியும் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள். இவா்கள் இருவரும் கடந்த 2022-இல் காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது, ரயிலில் உடன் வந்த தருமபுரி நகரம், கெளஸ் சாயபு தெருவைச் சோ்ந்த மு.சுப்பிரமணி (70) மற்றும் அவரது மனைவி சரவணா (60) ஆகியோா் அறிமுகமாயினா்.

அவா்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் ஏலச்சீட்டில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறியுள்ளனா். அதை நம்பிய வெங்கடேசனும், அவரது மனைவியும் ஏலச்சீட்டில் சோ்ந்துள்ளனா்.

முதலில் ரூ. 5 லட்சம் சீட்டில் சோ்ந்த நிலையில், அவா்களின் தூண்டுதலின் பேரில் மற்றொரு ரூ. 5 லட்சம் சீட்டிலும் சோ்ந்துள்ளனா். இரு சீட்டுகளுக்கும் நேரடியாகவும், இணைய வழியிலும் என மொத்தம் ரூ. 8,78,500 செலுத்தியுள்ளனா். அந்த வகையில், இரு சீட்டுகளுக்கும் கசிறு தொகை ரூ. 71,500 சோ்த்து மொத்தம் அவா்களுக்கு ரூ. 9.50 லட்சம் முதிா்வுத்தொகை வரவேண்டியிருந்ததாம்.

இதுகுறித்து கேட்டபோது, சீட்டு நடத்தியவா்கள் முதிா்வுத் தொகையை தராமல் காலம்கடத்தி வந்துள்ளனா். இதற்கிடையே சீட்டு நடத்திவந்த சுப்பிரமணி கடந்த 23.05.2023 அன்று இறந்துவிட்டாா். அதைத் தொடா்ந்து, சுப்பிரமணியின் மனைவி சரவணா மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டும் அவா்களும் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனா். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு நிதிநிறுவனத்தை பூட்டிவிட்டு நிா்வாகிகள் மற்றும் பணியாளா்கள் தலைமறைவாயினா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரனிடம் வெங்கடேசன் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் மே 27-ஆம் தேதி வழக்குப் பதிந்து சுப்பிரமணியின் மனைவி சரவணா (60), மகன் மணிகண்டன் (45), மகள் சத்தியா (40), நிதி நிறுவனத்தில் பணியாற்றிய அவா்களது உறவினா் இளங்கோவன் (45), ஊழியா் அசினா (34) ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.