நூற்றாண்டு விழா கண்ட கோவிலூர் தூய சவேரியார் ஆலயம்

தருமபுரி, செப். 17: கோவிலூர் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த தூய சவேரியார் ஆலயத்தில் அண்மையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ளது கோவிலூர். முன்பு பெல்லப்பகவுண்டஹ
Updated on
1 min read

தருமபுரி, செப். 17: கோவிலூர் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த தூய சவேரியார் ஆலயத்தில் அண்மையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது

தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ளது கோவிலூர். முன்பு பெல்லப்பகவுண்டஹள்ளி என்றிருந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் இருந்த ஏரிக்கரையில் சிலுவை வைத்து வழிபாடு தொடங்கியது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருள்தந்தை ஒருவர் இங்கு வந்து பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், 1702-ல் மறைப்பணியாளர்கள் தங்குமிடமாக மாறியது. 1831-ல் இப்போதைய ஆலயம் உள்ள பகுதியில் மற்றொரு இடத்தில் ஆலயம் இருந்தது. நாளடைவில் இந்த ஆலயமும் சிதிலமடைந்ததால், 1912 செப்டம்பர் 11-ல் இப்போதைய தூய சவேரியார் ஆலயம் கட்டப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலைநாயக்கர் மஹால் ஆகியவற்றைப் போன்று தூண்களுடன் கூடிய மண்டபங்கள் இருக்கும் வகையில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி, 14 தூண்கள் மட்டுமே நிறுவிய நிலையில் ஆலயமாக மாற்றப்பட்டது.

சுண்ணாம்புக் கலவை, கருப்பட்டி, முட்டை என்று பாரம்பரிய கட்டுமானக் கலை தொழில்நுட்பத்துடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிபுணர்கள் அறிவுரையுடன் இந்த ஆலயம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர், அக்டோபர் மாதங்கள் மற்றும் கிறிஸ்துமஸ், யேசு பிறப்பு, புனிதவெள்ளி உள்ளிட்ட முக்கிய நாள்களில் இங்கு விழாவும், தேர்பவனியும் நடைபெறும்.

யேசு பிறப்பை வெளிப்படுத்தும் பாஸ்கு நாடக விழா கடந்த 1847-ம் ஆண்டு முதல் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் அடுத்த வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நாடகம் நடைபெறும். இதற்காக 2001-ல் தனியாக கலையரங்க மேடை கட்டப்பட்டது.

ஆலயம் மட்டுமல்லாது தூய தோமையார் பள்ளி, தூய அருளப்பர்பள்ளி ஆகியவை 1869 முதல் செயல்படுகிறது. இப்போது, மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக 2 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளும் இயங்குகின்றன. மறை மாவட்டத்தில் முதல் பள்ளி என்ற பெருûமையும் பெற்றுள்ளது. தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனை, மாணவர் விடுதிகளும் உள்ளன. ஆலயத்தில் தினமும் காலை 6.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30, மாலை 7 மணிக்கு பிரார்த்தனை நடைபெறுகிறது.

நிகழாண்டு செப்டம்பர் 11-ல் 100 ஆண்டுகளை எட்டியதைத் தொடர்ந்து அண்மையில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த ஆலயத்தையும், பள்ளி மற்றும் இதர பணிகளையும் அருள்தந்தையர் சி.மைக்கேல் ஆண்ருஸ், ஜேசுதாஸ் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com