மலைக் கிராமங்களில் சூரியஒளி மின் அமைப்புடன் குடிநீர்த் தொட்டிகள்! மாவட்ட வனத்துறை அமைத்தது

தருமபுரி மாவட்டத்தின் 3 மலைக் கிராமங்களில் தலா ரூ. 11 லட்சம் மதிப்பில் சூரிய ஒளி மின்சார அமைப்புடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கக் குடிநீர் தொட்டிகளை மாவட்ட வனத்துறை அமைத்துள்ளது.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டத்தின் 3 மலைக் கிராமங்களில் தலா ரூ. 11 லட்சம் மதிப்பில் சூரிய ஒளி மின்சார அமைப்புடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கக் குடிநீர் தொட்டிகளை மாவட்ட வனத்துறை அமைத்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வனச் சரகத்துக்குள்பட்ட மலைக்கிராமங்கள் கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்கட்டு ஆகியன. நீண்ட தொலைவு நடந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையுள்ள இந்த மலைக் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து "தினமணி'யில் கடந்த டிசம்பரில் செய்தி வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, இம்மூன்று மலைக் கிராமங்களிலும் வனத்துறை சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்சாரம் இல்லாத நேரங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இம்மூன்று இடங்களிலும் சூரியஒளி மின் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மலைக் கிராமங்கள் என்பதால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க இயலாது. ஏற்கெனவே இப்பகுதியில் குடிநீர் எடுக்கும் கிணறுகளில் இருந்து தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கான மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. 
இம்மூன்று அமைப்புகளும் வனப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். போக்குவரத்து வசதியில்லாத மலைப் பகுதிகள் என்பதால், தொட்டி அமைப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் சூரியஒளி மின் தகடுகள்,  மோட்டார்களை மலைமேல் ஏற்றிச் செல்வதற்காக கழுதைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் 3 தொட்டிகள்!
இத்திட்டத்தில், பென்னாகரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட குண்டக்கரை சீகரளஅள்ளி கிராமத்திலும், ஏரியூர் மூலபெல்லூர் கிராமத்திலும் தலா ரூ. 13 லட்சம் மதிப்பில் இரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒகேனக்கல் வனச் சரகத்துக்கு உள்பட்ட பேவனூர் சோதனைச் சாவடிக்கு அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் ரூ. 13 லட்சம் மதிப்பில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தொட்டிகளுடன், ஆழ்துளைக் கிணறுகளும், தண்ணீரேற்றும் இயந்திரத்தை இயக்குவதற்கான சூரியஒளி மின் அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மூன்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 6 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் இரண்டு மணி நேரங்களில் நிரம்பும் வகையிலான மின்திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தலா 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com