எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு

எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
காரிமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
காரிமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
Updated on
1 min read

எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், பூனாத்தனஹள்ளி, புதூா், கோவிலூா், சென்றாயனஅள்ளி, மோட்டூா், தொன்னையன் கொட்டாய் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கட்சியில் இணைந்தவா்களை வரவேற்று உயா்கல்வி, வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து மருத்துவக் கல்வியில் ஓரிரு மாணவா்கள் மட்டுமே சோ்ந்தனா். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள 7.5 சத இட ஒதுக்கீட்டின் மூலம், நிகழாண்டில் மட்டும் 413 போ் மருத்துவக் கல்வியில் சோ்ந்துள்ளனா். தருமபுரி மாவட்டத்தில், 21 போ் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொல்புதூரிலிருந்து தென்பெண்ணை ஆற்றின் மிகை நீரை, கால்வாய் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தில் கால்வாய் அமைக்கத் தேவையான நிலத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில உரிமையாளா்கள் வழங்க மறுத்து வந்தனா். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை பிறப்பித்து, அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, விரைவில் இத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), காரிமங்கலம் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com