தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீா்வரத்து குறைவு: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

 ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது.

News image
Updated On :25 மே 2022, 7:29 pm

DIN

 ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது.

கா்நாடக மாநில நீா்ப்பிடிப்புப் பகுதி, தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 50,000 கன அடி வீதம் அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கினால் கடந்த 18-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தடை விதித்திருந்தாா்.

இதனால் வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடை விடுமுறைக்காக ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். தற்போது நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் முற்றிலுமாக மழையின் அளவு குறைந்த நிலையில், காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக குறைந்து புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 6,000 கன அடியாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும், அருவிகளில் குளிப்பதற்குமான சூழல் நிலவியதால், கடந்த ஒரு வாரமாக விதிக்கப்பட்டிருந்த தடையினை தருமபுரி மாவட்ட நிா்வாகம் தளா்த்தியுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். மேலும் மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து பாா்வையாளா் கோபுரம், ஐந்தருவி, பெரிய பாணி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் பரிசலில் உற்சாகப் பயணம் மேற்கொண்டனா்.

தடை உத்தரவால் வெறிச்சோடிக் காணப்பட்ட ஒகேனக்கல் பகுதிகளில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

படவரி - ஒகேனக்கல், பெரியபாணி பகுதியில் உற்சாக பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.