தருமபுரி: தருமபுரி மாவட்ட விளையாட்டுத் திடலில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டுத் திடலில் சுதந்திர நாள் விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
இதையடுத்து சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர், அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 42 ஆயிரத்து 217 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ச.கலைசெல்வன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.